Saturday, September 10, 2016

கர்த்தாரி யோகம்
ஒரு பாவத்துக்கு முன்பின் பாவங்களில் நட்பினரான சுபர் மட்டும் இருக்க அப்பாவத்தின் பலன் அவ்விரு கிரகத்தால் உயரும். இதற்கு சுப கர்த்தாரி யோகம் என்று பெயர்.

மேஷ லக்கினமாகி 12 இல் குருவும், 2 இல் உச்ச சந்திரனும் நிற்க அந்த சாதகனின் லக்கினத்தில் குரு மற்றும் சந்திரனின் காரக பலன் அனைத்தும் உயரும்.

ஒரு பாவத்தின் முன்பின் பாவங்களில் பகையான இரு கிரகங்கள் இருக்க அவை சுப கிரகங்களானால் அப்பாவம் வலு பெற்று இருப்பதுடன் அக்கிரங்களின் காரக உறவினரால் தீமையும் நடக்குமாம்.

இது சுப கர்த்தாரி யோகம் ஆனாலும் நன்மையையும் தீமையும் கலந்தே நடக்குமாம்.
துலா லக்கினமாகி 6 இல் குருவும் 8 இல் சுக்கிரனும் இருக்க, அந்த ஜாதகத்துக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் என்றாலும், பெண்களால் அல்லது குழந்தையால் இல்லறத்தில் குழப்பங்கள் உண்டாகுமாம்.

ஒரு பாவத்துக்கு முன்பின் இரு அசுபர் இருக்க அந்த பாவத்தின் பலன் அவலமாகுமாம். இதற்கு பாப கர்த்தாரி யோகம் என்று பெயர்.

கடக லக்கினமாகி எட்டில் சனியும், பத்தில் செவ்வாயும் நிற்பது சாதகனின் தந்தைக்கு தாழ்வும், பூர்வீக சொத்தில் பிரச்சினையும், குணத்தில் குறைபாடும், அவசர புத்தியும், கொடிய வழியில் ஈடுபடுதலும், வாழ்வில் குறையும் உண்டாகுமாம்.

பாவத்துக்கு எப்படி சுப மற்றும் அசுப கர்த்தாரி யோகம் செயல் படுமோ அவ்வாறே ஒரு கிரகம் நிற்கும் முன்பின் பாவங்களில் அமையும் சுப அசுப பகை நட்பு கிரகங்களை பொருத்துமாம்

மேஷ லக்கினமாகி, லக்கினத்தில் உச்ச சூரியனும், 12 இல் ஆட்சி குருவும், 2 இல் உச்ச சந்திரனும் இருக்க, சாதகனின் சூரியன் உயர் வலுவடைந்து, இராஜ யோகத்தை அனுபவிக்க செய்வானாம். சாதகனும் அவனது தந்தையும் உயர்வாகவே இருப்பாராம்.
அதே மேஷ லக்கினத்தில் உச்ச சூரியன் அமர்ந்து, விரயத்தில் உச்ச சுக்கிரனும், தனத்தில் உச்ச சந்திரனும் இருக்க, அன்னவருக்கு உயர் யோகம் இருப்பினும், அன்னை, தந்தை, மனைவியால் பலவித சச்சரவும், சண்டைகளும் உண்டாகி மன நிம்மதி இல்லாது போகுமாம்.

ஒரு பாவத்துக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கோ குருவும் சந்திரனும் முன்பின்னாக இருந்து அதில் ஒருவராவது வலுக்க, அந்த பாவமோ அல்லது கிரகமோ வலு அடையும்.

ஒரு பாவத்துக்கோ அல்லது கிரகத்துக்கோ முன்பின் இராசிகளில் புதனும் சுக்கிரனும் அமைந்து, அதில் ஒருவராவது வலுக்க, அந்த பாவமோ அல்லது அந்த கிரகமோ வலிமை அடையுமாம்.

ஒரு பாவத்துக்கோ அல்லது கிரகத்துக்கோ முன்பின் இராசிகளில் செவ்வாயும் சனியும் அல்லது சனியும் இராகுவும் இருக்க, அந்த பாவம் அல்லது கிரகம் வலிமை இழக்கும்.


சுக்கிரனும் குருவும் சுபர்களாயினும் ஒருவருக்கொருவர் பகைவர் ஆதலால், ஒரு பாவத்துக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கோ அவ்விருவரும் முன்பின்னாக இராசிகளில் அமர்வது தீதாம். இங்கு சுக்கிரன், குருவின் உறவுகள் நன்றாக இருப்பார். ஆனால் ஜாதகனுக்கு அவ்வுறவுகள் எட்டிக்காயாவராம். 

அன்பன் 
அ.வீ.மாரிமுத்து 
10 - 09 - 2016

No comments:

Post a Comment