Saturday, September 10, 2016

கிரகங்களின் பார்வை – (விம்ஷோத்தாரீ, தாஜக் மற்றும் மேலை நாட்டு முறைப்படி)

விம்ஷோத்தாரீ முறையில் சூரியனுக்கும் சனிக்கும் 1, 3, 7, 10 பார்வை என்றும்,  செவ்வாய்க்கு 1, 4, 7, 8 பார்வை என்றும், குருவுக்கு 1, 5, 7, 9 இடங்களை ;பார்க்கும் என்றும், சுக்கிரன் 1 ,6, 7, 8 ஆகிய இடங்களை பார்க்கும் என்றும், இராகு, கேதுக்கள் 1, 3, 7, 11 ஆகிய இடங்களை பார்க்கும் என்றும், சந்திரனும் புதனும் 1, 7 ஆகிய இடங்களை மட்டும் பார்ப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் தாஜக் முறையில் கிரகங்களின் பார்வை சற்று வித்தியாசமானது ஆகும். இம்முறையின் கண்டு பிடிப்பாளர்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் தாம்.

ஒரு கிரகம் தன் இருப்பில் சுமாராக பத்து பாகை வரை முன்பின் பார்க்க வல்லதாம்.
சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக 15 பாகை வரை பார்க்க வல்லது. சந்திரனோ  தானிருக்கும் இடத்தில் இருந்து 12 பாகை வரை பார்க்க வல்லது. குருவும் சனியும் தானிருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக 9 பாகை வரை பார்ப்பாராம். செவ்வாயோ தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக  8 பாகை வரை பார்ப்பார். மற்ற கிரகங்களான புதன், சுக்கிரன், இராகு, கேது ஆகியோர் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக  7  பாகை வரை மட்டுமே பார்ப்பாராம்.
இது விம்ஷோத்தாரீ முறையில் உள்ள பார்வையாம்.

ஆனால் தாஜக் முறையில் இவ்வாறு சொல்லப்படவில்லை. கூடலில் ஒரு பாகைக்குள் கூடிய கிரகங்கள் அதிக (நட்பு கிரகமாயின் நல்ல பலனிலும், பகை கிரகங்களாயின் மோசமான) பாதிப்பையும் அடைகின்றன என்றும், அந்த பாதிப்பு நன்மையாகவும் அல்லது கொடியதாகவும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆனால் கூடலில் ஐந்து பாகைக்குள் உள்ளவற்றை கூடலாக கொள்ளலாம் என்றும் ஒத்து கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் அவ்விரு கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தில் இருக்குமானால் அப்பலன் வெகு உயர்வாய் இருக்குமாம். அவ்விரு கிரகங்களும் நட்பாகி - இருந்த பாவத்தில் இருவரும் வலுவுடன் இருந்தால் அக்கூடலின் பலன் வெகு உயர்வாய் அமையுமாம். அதுவும் இருவரும் நட்பாய் இருக்க அப்பலன் வெகு உயர்வாய் அமைவது நிச்சயமாம். ஆனால் எதிரி கிரகங்களாயின் அக்கூடலின் பலன் சுமார் தாம்.
நட்பாகிய அசுபர்களாயின் அக்கிரக கூடலின் பலன் சுமாராகவே இருக்கும். உறவினரும் நலமுடன் ஆனால் தீயவராய் இருப்பர். பகையாகிய அசுபர்களாயின் அக்கூடலின் பலன் மிக மோசமாக இருக்கும்.

மேலை நாட்டு முறையிலும் நம் நாட்டு முறையிலும் கிட்டத்தட்ட கூடலை பொறுத்த வரை பலன்கள் சரியாகவே சொல்லப்பட்டுள்ளன.

சூரியனும் குருவும் மிதுனத்தில் அருகருகே அமர அந்த ஜாதகருக்கு தந்தை ஆசிரியராகவோ அல்லது வாயால் பிழைப்பவராகவோ அமைகிறார். குரு  அஸ்தமனம் ஆனால் அவருக்கு ஆண் குழந்தை இல்லாமல் போகின்றது. பெண் குழந்தை மட்டுமே அமையும். ஆனால் தந்தையாலும் மகளாலும் ஜாதகர் உதவிகளை பெறுவார்.
விருட்சிகம் லக்கினமாகி, பத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கூட, இங்கு சந்திரனும், சுக்கிரனும் அஸ்தமனம் ஆகிட, தந்தை மனக்கிளர்ச்சி உடையவனாகி, இன்னொரு பெண்ணை விரும்புபவன் ஆவான். ஆகவே தந்தையிடம் இருந்து ஜாதகர் பிரிவாராம்.

இங்கு சூரியன் நான்காம் இடத்தை பார்க்கின்றார். ஒருவேளை, சந்திரன் பாகை கணக்குப்படி நான்காமிடத்தின் துவக்கத்தை பாராவிடில், நான்கில் சூரியன் நட்பாவதால் நல்ல அன்னை உண்டாவாள்.

சூரியன் ஏழாமிடத்தை பகை பார்வையாய் பார்க்கின்றார். ஆகவே அங்கு தனது பலனை இழந்து, சுக்கிரனின் பலனை உயர்விப்பார். ஆக நல்ல கணவனை ஜாதகி அடைவாள். 
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
10.09.2016
கர்த்தாரி யோகம்
ஒரு பாவத்துக்கு முன்பின் பாவங்களில் நட்பினரான சுபர் மட்டும் இருக்க அப்பாவத்தின் பலன் அவ்விரு கிரகத்தால் உயரும். இதற்கு சுப கர்த்தாரி யோகம் என்று பெயர்.

மேஷ லக்கினமாகி 12 இல் குருவும், 2 இல் உச்ச சந்திரனும் நிற்க அந்த சாதகனின் லக்கினத்தில் குரு மற்றும் சந்திரனின் காரக பலன் அனைத்தும் உயரும்.

ஒரு பாவத்தின் முன்பின் பாவங்களில் பகையான இரு கிரகங்கள் இருக்க அவை சுப கிரகங்களானால் அப்பாவம் வலு பெற்று இருப்பதுடன் அக்கிரங்களின் காரக உறவினரால் தீமையும் நடக்குமாம்.

இது சுப கர்த்தாரி யோகம் ஆனாலும் நன்மையையும் தீமையும் கலந்தே நடக்குமாம்.
துலா லக்கினமாகி 6 இல் குருவும் 8 இல் சுக்கிரனும் இருக்க, அந்த ஜாதகத்துக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் என்றாலும், பெண்களால் அல்லது குழந்தையால் இல்லறத்தில் குழப்பங்கள் உண்டாகுமாம்.

ஒரு பாவத்துக்கு முன்பின் இரு அசுபர் இருக்க அந்த பாவத்தின் பலன் அவலமாகுமாம். இதற்கு பாப கர்த்தாரி யோகம் என்று பெயர்.

கடக லக்கினமாகி எட்டில் சனியும், பத்தில் செவ்வாயும் நிற்பது சாதகனின் தந்தைக்கு தாழ்வும், பூர்வீக சொத்தில் பிரச்சினையும், குணத்தில் குறைபாடும், அவசர புத்தியும், கொடிய வழியில் ஈடுபடுதலும், வாழ்வில் குறையும் உண்டாகுமாம்.

பாவத்துக்கு எப்படி சுப மற்றும் அசுப கர்த்தாரி யோகம் செயல் படுமோ அவ்வாறே ஒரு கிரகம் நிற்கும் முன்பின் பாவங்களில் அமையும் சுப அசுப பகை நட்பு கிரகங்களை பொருத்துமாம்

மேஷ லக்கினமாகி, லக்கினத்தில் உச்ச சூரியனும், 12 இல் ஆட்சி குருவும், 2 இல் உச்ச சந்திரனும் இருக்க, சாதகனின் சூரியன் உயர் வலுவடைந்து, இராஜ யோகத்தை அனுபவிக்க செய்வானாம். சாதகனும் அவனது தந்தையும் உயர்வாகவே இருப்பாராம்.
அதே மேஷ லக்கினத்தில் உச்ச சூரியன் அமர்ந்து, விரயத்தில் உச்ச சுக்கிரனும், தனத்தில் உச்ச சந்திரனும் இருக்க, அன்னவருக்கு உயர் யோகம் இருப்பினும், அன்னை, தந்தை, மனைவியால் பலவித சச்சரவும், சண்டைகளும் உண்டாகி மன நிம்மதி இல்லாது போகுமாம்.

ஒரு பாவத்துக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கோ குருவும் சந்திரனும் முன்பின்னாக இருந்து அதில் ஒருவராவது வலுக்க, அந்த பாவமோ அல்லது கிரகமோ வலு அடையும்.

ஒரு பாவத்துக்கோ அல்லது கிரகத்துக்கோ முன்பின் இராசிகளில் புதனும் சுக்கிரனும் அமைந்து, அதில் ஒருவராவது வலுக்க, அந்த பாவமோ அல்லது அந்த கிரகமோ வலிமை அடையுமாம்.

ஒரு பாவத்துக்கோ அல்லது கிரகத்துக்கோ முன்பின் இராசிகளில் செவ்வாயும் சனியும் அல்லது சனியும் இராகுவும் இருக்க, அந்த பாவம் அல்லது கிரகம் வலிமை இழக்கும்.


சுக்கிரனும் குருவும் சுபர்களாயினும் ஒருவருக்கொருவர் பகைவர் ஆதலால், ஒரு பாவத்துக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கோ அவ்விருவரும் முன்பின்னாக இராசிகளில் அமர்வது தீதாம். இங்கு சுக்கிரன், குருவின் உறவுகள் நன்றாக இருப்பார். ஆனால் ஜாதகனுக்கு அவ்வுறவுகள் எட்டிக்காயாவராம். 

அன்பன் 
அ.வீ.மாரிமுத்து 
10 - 09 - 2016
செவ்வாயுடன் கிரகங்கள் கூட
செவ்வாயும் சனியும் சேர அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள கால தாமத திருமணம் நடக்கும். அல்லது தகுதிக்கு கீழுள்ள இடத்தில் தான் திருமணம் நடைபெறும். அல்லது திருமணத்துக்கு பின் ஏதேனும் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். அல்லது கணவன் கெட்ட பழக்க வழக்கம் கொண்டவன் ஆவான். அல்லது கணவனுக்கு தீராத நோய் வருவதால் சுகம் அனுபவிக்க இயலாது.
செவ்வாயும் இராகுவும் கூட திருமணத்தில் தடைகள் உண்டாகும். அல்லது கணவனுக்கு தீராத நோய் உண்டாகும். அல்லது வேலை விஷயமாக பிரிந்து வாழ நேரும். சகோதரர் மூலம் சண்டை ஏற்பட்டு பிரியலாம்.
செவ்வாயும் கேதுவும் கூட அல்லது பரஸ்பரம் பார்த்து கொள்ள, திருமணத்தில் தடைகள் உண்டாகும். அல்லது கணவனுக்கு ஆண்மை இல்லாது போகும். அல்லது கணவன் அல்லது மனைவி சந்நியாசி போல் இருப்பதால் இல்லற வாழ்வு பாதிக்கும்.
செவ்வாய் தோஷத்தில் செவ்வாயே பாதிக்கப்பட்டால் செவ்வாய் கிழமையில் முருகனை வழிபட வேண்டும். செவ்வாயை சனி பாதித்தால், அனுமனை அல்லது அய்யனாரை அல்லது ஐயப்பனை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும்.
செவ்வாய் இராகுவால் பாதிக்கப்பட்டால், காளியை, மாரியம்மனை, செவ்வாய் கிழமையில் வணங்கி வர வேண்டும். செவ்வாய் கேதுவால் பாதிக்கப்பட்டால், விநாயகரை, காளியை, மாரியை செவ்வாய் கிழமையில் வணங்கி வர வேண்டும்.
செவ்வாயுடன் புதன் கூடுகையில் அல்லது அவர் மட்டும் பார்க்கையில் ஜாதகன் அல்லது அவனது மனைவி அந்நியருடன் கூடும் அவலம் ஏற்படுமாம்.

செவ்வாயுடன் சனி சேர்கையில் செவ்வாய் தோஷம் இல்லாது போகின்றது என்றோம். ஆனால் இல்லற வாழ்வில் பிரச்சினையை கொடுக்காது போகாது என்பதை அறிக. 

Friday, September 9, 2016

செவ்வாய் தோஷம்
1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் மங்களன் ஆகிய செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷமாம். ஆனாலும் அங்கு அந்த செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் ஆகிட  செவ்வாய் தோஷம் இல்லையாம்.
செவ்வாய் என்பவர் ஆணுக்கும் பெண்ணுக்கும் தாலி அல்லது உடல் சுகத்தை குறிப்பவர் ஆதலால், இரு பாலருக்கும் செவ்வாய் தோஷம் என்பது திருமணத்துக்கு முன்னரே பார்த்து இருவரையும் இல்லற வாழ்வில் இணைக்க வேண்டுமாம். எனவே செவ்வாயை மங்களன் என்கின்றனர்.
பொதுவாக செவ்வாய் தோஷம் என்பது இரத்தத்தில் அமிலத்தன்மையை குறிப்பதாம். இது கணவன் மனைவி இருவருக்கும் இருந்தாலோ அல்லது இருவருக்கும் இல்லாது போனாலோ அவர்களின் இல்லற சுகமும், புத்திர உற்பத்தியும் பாதிப்பதில்லை என ஜோதிடர்கள் கருதுகின்றனர்.
முதலில் செவ்வாய் லக்கினத்துக்கு 1, 2, 4, 7, 8, 12 இல் அமர்ந்ததை தோஷம் என்றனர். பின்னர் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் 2, 4, 7, 8, 12 இல் செவ்வாய் நின்றாலும் அதனை செவ்வாய் தோஷம் என்று ஆய்வு செய்து – நடை முறையில் அவை ஒத்து போனதால் – செவ்வாய் தோஷம் என்றனர்.
சந்திரனும் சுக்கிரனும் நீர் கிரகங்களாம். எனவே அவர்களது வீடுகளான துலாம், ரிஷபம் மற்றும் கடகம் ஆகிய மூன்றில் செவ்வாய் இருந்தாலும், அல்லது நீர் பாவங்களாம் மீனம், கடகம், விருட்சிகம் ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலும் செவ்வாய் தோஷமாம்.
செவ்வாய் கடகத்தில் நீச்சம் ஆவதால் அங்கு அவர் வலுவற்றவர் ஆனாலும் தோஷத்தை செய்வாராம். செவ்வாய் ஆட்சியானாலும் விருட்சிகம் நீர் பாவம் ஆவதால் – அங்கு ஆட்சி அடைந்த செவ்வாய் தோஷத்தை உண்டாக்குவாராம்.
ஆனால் செவ்வாய் மேஷத்தில் ஆட்சியானாலும் அவ்வீடு நெருப்பு இராசி ஆவதால் அங்கு அவர் தோஷத்தை ஏற்படுத்துவதில்லை.
ஆக செவ்வாய் ரிஷபம், கடகம், துலாம், மீனத்தில் இருக்க, அவ்வீடு 1, 2, 4, 7, 8, 12 ஆனால் நிச்சயம் அது செவ்வாய் தோஷமாம்.
மேஷ லக்கினமாகி செவ்வாய் 2 அல்லது 4  அல்லது 7 அல்லது 12 இல் இருக்க அது செவ்வாய் தோஷமாம்.
ரிஷப லக்கினமாகி செவ்வாய் 1, 7  இல் இருக்க மட்டும் செவ்வாய் தோஷமாம். இங்கு செவ்வாய் ஆட்சியானாலும் நிற்கும் வீடு நீர் இராசி ஆவதால் தோஷம் உண்டாகும்.
மிதுன லக்கினத்துக்கு இரண்டு, பன்னிரண்டாமிடங்களில் செவ்வாய் நின்றால் மட்டும் செவ்வாய் தோஷமாம்.
கடக லக்கினத்துக்கு 1, 4 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்க தோஷமாம்.
சிம்ம லக்கினத்துக்கு 4,  8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்க செவ்வாய் தோஷமாம்.
கன்னி லக்கினத்துக்கு 2, 7 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்க அது செவ்வாய் தோஷமாம்.
துலா லக்கினத்துக்கு 1, 2, 8 ஆகிய இடங்களில் செவ்வாய் நிற்பது தோஷமாம்.
விருட்சிக லக்கினத்துக்கு 1, 7, 12 இல் செவ்வாய் நிற்பது தோஷமாம்.
தனுசு லக்கினத்துக்கு 4, 8 ஆகிய இடங்களில் நிற்கும் செவ்வாய் தோஷம் கொடுக்கும்.
மகர லக்கினத்துக்கு 7 மிடத்தில் நின்ற செவ்வாய் தோஷத்தை கொடுப்பார்.
கும்ப லக்கினத்துக்கு 2, 4 ஆமிடங்களில் நின்ற செவ்வாய் தோஷத்தை கொடுப்பார்.
மீன லக்கினத்துக்கு 1, 8 இல் நின்ற செவ்வாய் தோஷம் கொடுப்பார்.

செவ்வாய் தோஷம் ஆண் பெண் இருவருக்கும் இல்லாது போக அவ்விருவரையும் கணவன் மனைவியாக்கலாம். செவ்வாய் தோஷம் இருவருக்கும் இருந்தாலும் அவ்விருவரையும் மண வாழ்வில் ஈடுபடுத்தலாம். ஒருவருக்கு இருந்து இன்னொருவருக்கு இல்லையெனில் அவ்விருவரையும் இல்லறவாழ்வில் இணைக்கக் கூடாது.

Saturday, August 6, 2016

26. பிறந்த நாள்

நான் ஏன் பிறந்தேன் என்று புரட்சி தலைவர் எழுதினார். I am not Mahatma; I am an alpathma என்று தன்னை தாழ்த்தியே தேசத் தந்தை தன் சுய சரிதயை துவங்கியுள்ளார். இப்புவியில் பிறந்ததே நம் குறைகளால் மட்டுமே என்றும் அப்படி பிறந்த நாம் நம் தவறுகளை இப்பூமியில் உள்ள போதே திருத்தி வாழ்ந்தால், உன்னத நிலையை அடையலாம் என்றும் பல நீதி நூல்கள் சொல்லுகின்றன.

நீதி நூல்கள் சொல்லுவனவற்றுள் நமக்கு சாதகமாக எது உள்ளது என்று பார்ப்பதிலேயே இன்றுள்ளவர்கள் இருப்பதால் - மனித நேயமும் மாண்பும் பலரிடம் வற்றியே காணப்படுகின்றது.

என்றாலும் இன்றும் அடுத்தவருக்கு இரங்கும் மனிதர் ஓரு சிலர் இல்லாமல் போகவில்லை. அன்னை தந்தையரை சாகும் வரை கண்ணும் கருத்துமாய் காப்பாற்றும் புத்திரர்கள் இருக்கவும் செய்கிறார்கள். மாமனார், மாமியாரை நேசிக்கும் எத்தனையோ மங்கையரும் தான் உள்ளார்கள். அண்டை அயலாரை நேசிக்கும் விந்தை மனிதரும் உள்ளனர்.

என் இனிய இந்த பிறந்த நாளில் நான் கேக் வெட்டுவதை விட, மேற்சொன்ன அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது ஆசிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

இன்று என் பேத்தியிடம் ஓரு கதை சொன்னேன்.

ஒரு உக்கிரமான வெயில் கால பகல் போதில், ஒரு தவ முனிவர் அலைந்து திரிந்து ஒரு வேப்ப மர நிழலில் வந்து நின்றார். அவருக்கு அந்த வேப்ப மர நிழல் அவ்வளவு இதமாக இருந்தது. ஆகவே, அவர் அவ்விடத்தை விட்டு அகலும் முன்பு, அம்மரத்திடம் என்ன வேண்டும் என்று கேட்டார்.

மரம் உடனே அழாத குறையாக - முனிவரே! நான் முப்பது அடி வரை வளர்ந்து என்ன பயன்? என் பழங்களை மனிதர் யாரும் புசிப்பதில்லையே! பறவைகள் மட்டுமே கொத்தி தின்னுகின்றன. ஆகவே ஆப்பிள் பழம் போல சுவை மிகுந்ததாயும் தேங்காயை போல் உறுதியான தோலும் உள்ள பழமாய் நான் உருவாக்கிட அருளுங்கள் என்றது.

உடனே அம்முனிவர் அம்மர அடியில் அமர்ந்து கண்களை மூடி ஈசனை நினைந்து - அந்த மரத்துக்கு கடின தோலுடைய சுவை மிகுந்த பழத்தை பெரிய அளவில் படைக்குமாறு வேண்டினார்.

ஈசன் சொன்னார் - கேட்பதற்கு முன்னர் யோசித்து கேள் என்றார். முனிவரும் பிடிவாதமாய் இருந்ததால், ஈசன் முனிவரிடம் ஒரு நிபந்தனை விதித்தார்.

இறைவன் அம்மர உச்சியில் முதலில் ஒரு பழத்தை மட்டும் படைப்பதாயும், அப்பழத்தினால் நன்மை உண்டாகும் என்று முனிவர் தன் வாயால் சொன்னால், பின்னர் அந்த மரம்  முழுவதும் பெரிய அளவு பழங்களை படைப்பதையும் ஈசன் ஒத்துக் கொண்டார்.

வேறு வழியில்லாமல் முனிவரும் அம்மரத்தின் அடியிலேயே சில காலம் தங்க வேண்டி வந்தது.

பூ, பிஞ்சு, காய், பழம் என்று சில நாட்களில் முனிவரின் மனம் குளிர, வேப்ப மரம் பழம் ஒன்றை தன்னுள் கொண்டிருந்தது.

அதனை பார்த்த அந்த முனிவர், அந்த பழத்துக்கு நேர் கீழே அமர்ந்து கண்களை மூடி, தலைவிரி கோலமாய் தவம் செய்ய ஆரம்பித்தார். பழம் விழும் நேரமும் வந்ததால், கீழே விழுந்தது. மிக உயரத்தில் இருந்து விழுந்ததால் முனிவர் கபால மோட்சம் அடைந்தார்.

இனி இது மாதிரி பழங்களையே அந்த மரம் தர வேண்டும் என்று சொல்ல வேண்டிய முனிவரும் இறந்து போனதால், வேப்ப மரம் இது வரை வேப்பம் பழங்களை மட்டுமே தந்த வண்ணம் உள்ளன.

அடுத்த முனிவர் யாரேனும் வருவாரா என்று ஏக்கத்துடன் அந்த வேப்ப மரம் இன்னும் எதிர் நோக்கி காத்துள்ளது.

அம்முனிவருக்கு ஏற்பட்ட கபால மோட்சத்தை அறிந்த மற்ற முனிவர்களும் அம்மரத்திடம் செல்லாமல் இன்றும் விலகி போவதை பலர் சொல்ல நானும் கேட்டிருக்கின்றேன்.

நல்ல வேளை! நியூட்டன் மேல் பலாப் பழம் விழவில்லை. புவி ஈர்ப்பு விதி நமக்கு கிடைக்க வேண்டும் என்பதுவும் அதற்கு ஒரு காரணமோ?

எல்லோருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

எல்லா நலமும் எல்லா வளமும் அனைவரும் பெருக!

வாழ்க வளமுடன்!

அன்பன்

அ .வீ .மாரிமுத்து    07 - 08 - 2016

Thursday, August 4, 2016

25. இன்னும் நீச்சத்தை பற்றி 

நீச்சனும் உச்சனும் சேர அதனை நீச்ச பங்க இராஜயோகம் என்று ஒரு சாரார் சொல்லுகின்றனர். ஆனால் அதனை அனுபவத்தில் முழுமையாக ஏற்று கொள்ள இயலவில்லை.

விருட்சிக லக்கினத்துக்கு 9 இல் குரு உச்சமாயும், உடன் அருகில் செவ்வாய் நீச்சமாயும் இருக்கையில் -  அதனை இராஜ யோகம் என்று சொல்வதா? அல்லது அது அவ்வாறு இல்லை என்று சொல்வதா?

இங்கு ஒன்றை உணர்த்தியே ஆக வேண்டும். ஒரு கிரகம் தனித்து நீச்சம் அடைந்தாலும் அல்லது ஒரு கிரகம் இன்னொரு நீச்ச கிரகத்துடன் சேர்ந்தாலும் அக்கிரக காரக உறவினரை தாழ்த்தியே சொல்ல வேண்டும்.

விருட்சிக லக்கினத்துக்கு ஒன்பதில் நீச்சனும் உச்சனும் அருகருகே ஒன்று சேர - அவ்விரு கிரகங்களின் உறவினர்களான குழந்தை மற்றும் சகோதரர்கள் ஆகியோர் இல்லாது போவர். அல்லது இருந்தும் பயனற்று போவாராம்.

இந்த ஜாதகனுக்கு மகன் இல்லை. ஒரே ஒரு மகள் தான் உண்டு. குருவுடன் செவ்வாய் கூடியதால் இந்த பலனாம். இந்த ஜாதகனுக்கு நிறைய சகோதரர்கள் பிறந்து அதில் பலர் இறந்து - இருவர் மட்டுமே நிலைத்தனர். அவர்களும் வாழ்வில் உயர் நிலைக்கு போக வில்லை.

ஆனால் குருவும் செவ்வாயும் கூடியதால் - அது நீச்ச பங்கம் ஆவதால் - இந்த ஜாதகன் ஒரு விதமான இராஜ யோகத்தை அனுபவித்து வருகின்றான். ஒன்பதாமிடம் தெய்வங்களை குறிக்கும் இடம். குரு தெய்வ வழிபாட்டை  சொல்பவர். செவ்வாய் பிடிவாதம் - சாகசம் ஆகியவற்றை சொல்பவர். இந்த ஜாதகன் ஒரு மந்திரவாதியாய் இருக்கின்றான். நிறைய சம்பாதிக்கவும் செய்கின்றான்.

இதே லக்கினத்துக்கு ஒன்பதில் குரு 28 பாகையிலும் செவ்வாய் 15 பாகையிலும் - சற்று விலகி - இருக்க, (இருவரும் ஒரே பாவத்தில் இருந்த போதிலும், ஒருவரை ஒருவர் பாராததால்)  இது உண்மையான நீச்ச பங்கம் ஆகுமாம். அதாவது அம்சையில் இருவரும் ஆட்சி ஆகின்றனர்.

ஆகவே நீச்சனுடன் சேராத உச்சன் குரு, ஜாதகனுக்கு மகனை கொடுத்து விடுவார். அந்த மகனும் உயர் நிலைக்கு வந்தும் விடுவார். செவ்வாய் தனித்து நீச்சம் அடைந்தாலும், அவர் அம்சையில் ஆட்சி அடைந்ததால், சகோதரர்களும் அவரவரது முப்பது வயது வாக்கில், வாழ்வில் உயர வாய்ப்புண்டாம்.

உச்சனை ஒரு நீசன் பார்த்தாலும் இந்த கதி தான்! மகர லக்கினத்துக்கு ஐந்தில் நின்ற உச்ச சந்திரனை, லக்கினத்தில் நின்ற நீச்ச குரு பார்த்தாலும், - -- அது உறவுகளான - அன்னை மற்றும் குழந்தையை கெடுக்கும் என்பதை அறிக. ஆனால் அன்னையையும் குழந்தையையும் கொடுத்தே குழப்பங்களை அளிப்பாராம். ஐந்தில் உச்சன் அமர்ந்ததால் இப்பலனாம்.

கன்னி லக்கினத்துக்கு ஏழில் சுக்கிரனும் புதனும் அருகருகே சேர, அவனுக்கு அம்மானும் மனைவியும் ஏதேனும் குறையுடன் இருப்பர். சுக்கிரன் உச்சம் ஆவதால் மனைவி நீண்ட ஆயுளையும், புதன் நீச்சம் ஆவதால் அம்மான் மத்திய ஆயுளையும் பெற்றிருப்பராம்.

ஏழில் இரு சுபர் இருப்பது கேந்திர தோஷத்தை குறிப்பதாம். என்றாலும் உச்ச சுக்கிரனுடன் நீச்ச புதன் சேர்ந்ததால் - இருவரும் சுபர் ஆவதால் - ஜாதகன் இளமையில் கல்வியில் தடையை அனுபவிப்பான். ஆனால் முப்பது வயதுக்கு மேல் ஜாதகன் வாக்கு சம்பந்த தொழிலில் ஈடுபடுவான்.

ஒருவரது தொழிலை நிர்ணயம் செய்ய, ஒன்றாமிடம், இரண்டாமிடம், பத்தாமிடம், இலாப பாவம் ஆகியவற்றில் நின்ற வலுவான கிரகங்கள் மற்றும் மேற்சொன்ன இடங்களின் அதிபதியுடன் கூடிய வலுத்த கிரகத்தால் அறிய வேண்டும் என்பர் ஜோதிட வல்லுனர்கள். இதை ஓட்டியே மேலே பலன் சொல்லப்பட்டதாம்.

இந்த நீச்ச பங்கத்துக்கும் முப்பது வயதுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. முப்பது வயது வரை மோசமான பலன்களை அடைந்த பிறகு தான் வாழ்வில் முன்னேறும் நிலை அமையும்.

இன்னும் நீச்சத்தை பற்றி உதாரணத்துடன் பேச வேண்டியுள்ளது.

அடுத்த பகுதியில் சந்திப்போம்.

அன்பன்

அ .வீ . மாரிமுத்து   04 - 08 - 2016

Wednesday, August 3, 2016

24. நன்றாயிரு மருமகளே!

அப்போது நான் ஓய்வு பெற்று வீட்டில் இருந்தேன். ஒரு நாள் என் கீழ் பணி புரிந்த பொறியாளர் ஒருவர், தன் மனைவியுடன் என் இல்லத்துக்கு வந்தார். நீர், டீயெல்லாம் முடிந்ததும், பொதுவாக பேச்சு போனது.
மாமியார் மருமகள் கதை வந்தது.

என் நண்பரின் மனைவியார் தன்னை மாமியார் சரியாக நடத்துவதில்லை என்று பொதுவாக - மெதுவாக சொன்னார்.

நான் அவரை தனியே அழைத்து ஒரு மந்திரத்தை என் நண்பரின் மனைவிக்கு சொன்னேன்.

அவையாவன;

காலையில் எழுவதை ஆறு மணிக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  இது மாமியார்க்கும் மட்டும் அல்ல, உங்கள் உடல் வளத்துக்கும் நல்லது.

காலையில் டீ அல்லது காஃபி போட்டால் முதலில் மாமனார் மற்றும் மாமியாருக்கு கொடுத்து விட்டு - முடிந்தால் ஒரு புன்னகையுடன் ஒரு குட் மார்னிங் சொல்லுங்கள். அதன் பிறகே கணவனுக்கு டீ அல்லது காஃபி கொடுக்க வேண்டும்.

குளித்து முடித்து - உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ - பூஜை அறைக்கு சென்று - ஒரு சூடத்தை கொளுத்தி விட்டு - வாயால் சற்று சத்தமாக முனகி கொண்டே - விபூதி குங்குமம் வைத்து கொண்டு - அப்படியே மாமியார் மாமனாரிடம் சென்று பூஜை தட்டை காண்பித்து - அப்படியே அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து விட்டு - என்ன அத்தை சமைக்க என்று ஒரு வார்த்தை கேட்டாலே - எல்லா மாமியார்களும் சுருண்டு போய் விட மாட்டார்களா?

மதியம் சாப்பாட்டுக்கு பின்னர் மாமனார் மாமியாரை சற்று படுத்து ஓய்வெடுங்கள் என்று இதமாக சொல்லுங்கள். அவர்களும் அதற்கு ஒத்து கொள்வர். இதில் இன்னுமொரு வசதியும் உள்ளது. நீங்களும் கொஞ்ச நேரம் அசரலாம். அவர்களால் ஒன்றும் சொல்ல இயலாது அல்லவா?

மாலை ஐந்து மணிக்கெல்லாம் மாமியாரை கோவிலுக்கு அழையுங்கள். அவர் வந்தால் அவருடன் கோவிலுக்கு போங்கள். அவர் வரவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த இடத்துக்கு சென்று சேலையோ, ஜிமிக்கியோ வாங்கி வரலாம். அல்லது கோவிலுக்கும் போய் வரலாம்.

அவ்வாறு நீங்கள் மட்டும் தனியாக போய் வர நேரிட்டால், திரும்பி வருகையில் நிச்சயம் மாமனாருக்கும் மாமியாருக்கும் பிடித்த தின்பண்டம் எதையாவது வாங்கி கொடுத்து பாருங்கள்.

பிறகு உங்கள் கணவர் உங்களுக்கு பரிந்து பேசினாலும் பேசாவிட்டாலும், உங்களுக்காக குரல் கொடுக்க, உங்கள் மாமனாரும் மாமியாரும் போட்டி போட்டுக் கொண்டு முன் வருவார்கள்.

உங்கள் கணவரே உங்களுக்கு எதையாவது வாங்கி வந்து கொடுத்தாலும், உடனே உங்கள் கணவரிடம், அதனை  மாமியாரிடம் கொடுத்து, அவர் கையால் உங்களுக்கு கொடுக்க சொல்லுங்கள் என்று மாமனாருக்கும் மாமியாருக்கும் கேட்கும்படி சற்று உரக்கவே சொல்லி பாருங்கள்.

இது போல நீங்கள் செய்ய ஆரம்பித்தால், நிச்சயம் உங்கள் மாமியாரும் மாமனாரும் உங்களை குல சாமி என்றே தொழ ஆரம்பித்து விடுவர்.

பின்னர் அவர்கள் இருவரும் விடை பெற்று சென்று ஒரு மாதம் கழித்து எனக்கு என் நண்பர் ஃ போன் செய்தார். இப்போது மாமியாரும் மருமகளும் ஒத்து போய் விட்டார்கள் என்றும்  அவரை கூட சரிவர அவரது மனைவி கவனிப்பதில்லை என்று பூரித்து விட்டார் போங்கள்.

எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. இவ்வளவையும் என் அண்ணியாருக்கும் நான் சொல்லித் தான் பார்த்தேன். என்ன புண்ணியம்! என் அம்மா இருக்கும் வரையிலும் இருவரும் எலியும் பூனையும் போல் அப்படி ஒரு ஒற்றுமையாய் இருந்ததை இன்னமும் என்னால் மறக்க இயலவில்லையே!

அன்பன்
அ . வீ . மாரிமுத்து   03 - 08 - 2016