Wednesday, August 3, 2016

24. நன்றாயிரு மருமகளே!

அப்போது நான் ஓய்வு பெற்று வீட்டில் இருந்தேன். ஒரு நாள் என் கீழ் பணி புரிந்த பொறியாளர் ஒருவர், தன் மனைவியுடன் என் இல்லத்துக்கு வந்தார். நீர், டீயெல்லாம் முடிந்ததும், பொதுவாக பேச்சு போனது.
மாமியார் மருமகள் கதை வந்தது.

என் நண்பரின் மனைவியார் தன்னை மாமியார் சரியாக நடத்துவதில்லை என்று பொதுவாக - மெதுவாக சொன்னார்.

நான் அவரை தனியே அழைத்து ஒரு மந்திரத்தை என் நண்பரின் மனைவிக்கு சொன்னேன்.

அவையாவன;

காலையில் எழுவதை ஆறு மணிக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  இது மாமியார்க்கும் மட்டும் அல்ல, உங்கள் உடல் வளத்துக்கும் நல்லது.

காலையில் டீ அல்லது காஃபி போட்டால் முதலில் மாமனார் மற்றும் மாமியாருக்கு கொடுத்து விட்டு - முடிந்தால் ஒரு புன்னகையுடன் ஒரு குட் மார்னிங் சொல்லுங்கள். அதன் பிறகே கணவனுக்கு டீ அல்லது காஃபி கொடுக்க வேண்டும்.

குளித்து முடித்து - உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ - பூஜை அறைக்கு சென்று - ஒரு சூடத்தை கொளுத்தி விட்டு - வாயால் சற்று சத்தமாக முனகி கொண்டே - விபூதி குங்குமம் வைத்து கொண்டு - அப்படியே மாமியார் மாமனாரிடம் சென்று பூஜை தட்டை காண்பித்து - அப்படியே அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து விட்டு - என்ன அத்தை சமைக்க என்று ஒரு வார்த்தை கேட்டாலே - எல்லா மாமியார்களும் சுருண்டு போய் விட மாட்டார்களா?

மதியம் சாப்பாட்டுக்கு பின்னர் மாமனார் மாமியாரை சற்று படுத்து ஓய்வெடுங்கள் என்று இதமாக சொல்லுங்கள். அவர்களும் அதற்கு ஒத்து கொள்வர். இதில் இன்னுமொரு வசதியும் உள்ளது. நீங்களும் கொஞ்ச நேரம் அசரலாம். அவர்களால் ஒன்றும் சொல்ல இயலாது அல்லவா?

மாலை ஐந்து மணிக்கெல்லாம் மாமியாரை கோவிலுக்கு அழையுங்கள். அவர் வந்தால் அவருடன் கோவிலுக்கு போங்கள். அவர் வரவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த இடத்துக்கு சென்று சேலையோ, ஜிமிக்கியோ வாங்கி வரலாம். அல்லது கோவிலுக்கும் போய் வரலாம்.

அவ்வாறு நீங்கள் மட்டும் தனியாக போய் வர நேரிட்டால், திரும்பி வருகையில் நிச்சயம் மாமனாருக்கும் மாமியாருக்கும் பிடித்த தின்பண்டம் எதையாவது வாங்கி கொடுத்து பாருங்கள்.

பிறகு உங்கள் கணவர் உங்களுக்கு பரிந்து பேசினாலும் பேசாவிட்டாலும், உங்களுக்காக குரல் கொடுக்க, உங்கள் மாமனாரும் மாமியாரும் போட்டி போட்டுக் கொண்டு முன் வருவார்கள்.

உங்கள் கணவரே உங்களுக்கு எதையாவது வாங்கி வந்து கொடுத்தாலும், உடனே உங்கள் கணவரிடம், அதனை  மாமியாரிடம் கொடுத்து, அவர் கையால் உங்களுக்கு கொடுக்க சொல்லுங்கள் என்று மாமனாருக்கும் மாமியாருக்கும் கேட்கும்படி சற்று உரக்கவே சொல்லி பாருங்கள்.

இது போல நீங்கள் செய்ய ஆரம்பித்தால், நிச்சயம் உங்கள் மாமியாரும் மாமனாரும் உங்களை குல சாமி என்றே தொழ ஆரம்பித்து விடுவர்.

பின்னர் அவர்கள் இருவரும் விடை பெற்று சென்று ஒரு மாதம் கழித்து எனக்கு என் நண்பர் ஃ போன் செய்தார். இப்போது மாமியாரும் மருமகளும் ஒத்து போய் விட்டார்கள் என்றும்  அவரை கூட சரிவர அவரது மனைவி கவனிப்பதில்லை என்று பூரித்து விட்டார் போங்கள்.

எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. இவ்வளவையும் என் அண்ணியாருக்கும் நான் சொல்லித் தான் பார்த்தேன். என்ன புண்ணியம்! என் அம்மா இருக்கும் வரையிலும் இருவரும் எலியும் பூனையும் போல் அப்படி ஒரு ஒற்றுமையாய் இருந்ததை இன்னமும் என்னால் மறக்க இயலவில்லையே!

அன்பன்
அ . வீ . மாரிமுத்து   03 - 08 - 2016

No comments:

Post a Comment