Tuesday, August 2, 2016

21. ஆட்சி கிரகங்களை பார்த்தல்

நான் ஏற்கனவே சொன்னது மாதிரி ஒரு கிரகம் தன சொந்த வீட்டிலேயே இருந்து யாராலும் பார்க்கப்படாமலும், யாருடனும் கூடாமலும் இருந்தால், அதற்கு தனித்த கிரகம் என்று பெயர்.

அப்படி ஒரு கிரகம் தனித்து ஆட்சி பெற்றால் அக்கிரகத்தின் கார பலன் அவ்வீட்டில் உயர்ந்தும், காரக பலன் தாழ்ந்தும் போகும் என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன்.

விருட்சிக லக்கினத்துக்கு நான்கில் சனி ஆட்சியாகி தனிக்க, காரபலனாம் (நான்காம் அதிபதி நான்கில் உள்ளதால்) அன்னை நீண்ட ஆயுள் உள்ளவளாக இருப்பாள். ஆனால் காரக பலன் (அதாவது நான்கில் சனி உள்ளதால்) ஜாதகன் கபடனாயும், கூட்டு குடும்பத்தில் பற்றற்றவனாயும் இருப்பான். சுய நலம் மிக்கவன் ஆவான். யாராவது சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று இவனிடம் சொன்னால், உடனே இவனுக்கு வயிறு எரிய ஆரம்பித்து விடும்.

இதே ஜாதகனுக்கு சந்திரன் வலுத்து இருக்க அன்னை சிறந்தவளாயும், கடின உழைப்பாளியாகவும் இருப்பாள். ஆனால் சந்திரன் வலுவற்று போக, அன்னையின் ஆயுள் அதிகம் ஆயினும், அன்னை துர் நடத்தை கொண்டவள் ஆவாள்.

மகர லக்கினத்துக்கு நான்கில் செவ்வாய் ஆட்சியாகி தனிக்க, சந்திரன் உச்சமாகிட, சாதகனின் அன்னை நீண்ட ஆயுளும் சிறந்த குணவதியும் ஆவாள். அவள் எதையும் சாதிக்கும் தன்மையும் அமைந்தவள் ஆவாள். ஆனால் நான்கில் செவ்வாய் இருப்பதால் அன்னையிடம் உறவு மத்திய வயதில் இருந்து பாதிக்கப்படும். மேலும் ஜாதகன் நிலபுலம் இல்லாத வீட்டில் பிறந்திருப்பான். அப்படியே இருந்தாலும் இவன் அந்த நிலபுலன்களை அனுபவிக்க இயலாது போகும்.

ஆனால் இந்த விருட்சிக லக்கினத்தின் நான்காம் இடத்தில் உள்ள சனியை ஐந்தாமாதியாம் குருவோ அல்லது பதினோராம் அதிபதியாம் புதனோ கூட அல்லது பார்க்க ஜாதகன் நல்ல அன்னையையும், நாளடைவில் நல்ல உள்ளத்தையும் அடைவானாம்.

இங்கு புதன் எட்டாமாதியாயிற்றே அவர் கூடினால் நன்மை இராதே என நீங்கள் கேட்கலாம்.

சனியும் புதனும் நல்ல நண்பர்கள். எனவே இருவரும் கூடுகையில் சனியானவர் புதனை இலாபாதியாக மட்டுமே பார்ப்பார். அவரை சனி எட்டாமாதியாக நினைக்கவும் மாட்டார். ஆகவே கார பலனோ அல்லது காரக பலனோ  நல்ல பலனை மட்டுமே செய்வாராம்.

அது போலவே சனியும் குருவும் சமர்கள். எனவே விருட்சிக லக்கினத்துக்கு சனியும் நல்லவர் தாம். குருவும் பூரண சுபர் தாம். ஆகவே அக்கூடலும் நல்லதாகவே இருக்கும்.

ஆகவே ஆட்சி பெற்று தனித்த கிரகத்தை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை இங்கு உணர்ந்திருப்பீர்கள் என்று நான் உணர்கின்றேன்.

விருட்சிக லக்கினத்துக்கு நான்கில் உள்ள சனியை ஆறில் இருந்து இராகு பார்த்தால் நிச்சயம் அது கார பலனையும் காரக பலனையும் கெடுக்கும் தான். ஆனால் முற்றிலும் கெடுக்காது. ஏன் எனில் சனி ஆட்சியாய் இருப்பது தான். ஆனால் நான்கில் இராகுவும் சேர ஜாதகனின் அன்னையும், ஜாதகனும் முதல் தர கேடியாய் இருப்பர். இவரது வேலையே மற்றவரை கெடுப்பதாய் தான் இருக்கும். காரணம் இராகு எந்த வீட்டில் உள்ளாரோ அவ்வீட்டின் ஆட்சி கிரகம் ஆவதே. ஒரே வீட்டில் இரு அரசர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். என்றாலும் இருவரும் நட்பாய் இருப்பதால் கொஞ்சமாவது மட்டு மரியாதை இருக்கும்.

மகர லக்கினத்துக்கு நான்கில் உள்ள செவ்வாயுடன் இராகு சேர - இங்கு கார, காரக பலன்கள் இன்னும் மோசமாகவே நடக்கும். காரணம், இங்கு இருவரும் அசுபர்கள் மட்டும் அல்ல! எதிரிகளும் கூட! ஆக இப்படிப்பட்ட ஜாதகர் மட்டு மரியாதை எல்லாம் துறந்தே போய் விடுவராம்.

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வையுங்கள். இரு கிரகங்கள் ஒரு வீட்டில் இருந்தால் - அவர்களில் ஒருவர் ஆட்சியானால் - அவ்விருவரும் நல்ல ஆதிபத்தியம் உள்ளவர் ஆனால் - அவ்வீட்டின் கார காரக பலன்கள் அவ்விருவரை பொறுத்த அளவில் வெகு உயர்வாக நடக்கும். அதிலும் அவ்விருவரும் அமர்ந்த இடம் சுபர் வீடாகி, அவ்விருவரும் சுபராகி, அவ்விருவரும் நட்பு அல்லது சமராகிட வெகு உயர்வான பலனை தருவராம்.

ஒரு வீட்டில் கூடிய அவ்விருவரில் ஒருவர் ஆட்சியாகி, அவ்விருவரில் ஒருவர் நல்லாதிபத்தியராயும், இன்னொருவர் மோசமான ஆதிபத்தியராயும் இருக்க, அவ்வீட்டில் அவ்விருவரின் கார, காரக பலன்கள் கெடுமாம். அதிலும் அவ்விருவரும் பரஸ்பரம் எதிரிகளானால் இன்னும் மோசமான பலனையே தருவராம்.

அவ்விருவரும் அசுபர்களாகியும், இருவரும் அசுப ஆதிபத்தியராயும் அல்லது மாரகராயும் இருந்து, இருவரும் எதிரிகளாக, அக்கூடலின் பலன்கள் மோசமாகுமாம்.

இவற்றை உதாரணங்களுடன் சொன்னால் இன்னும் நன்றாக உங்களால் புரிந்து கொள்ள இயலும் என்பதால் அடுத்த பகுதியில் அவ்வாறு சந்திப்போம்.

நண்பன்
அ .வீ. மாரிமுத்து   02 - 08 - 2016
.


No comments:

Post a Comment