Friday, July 29, 2016

இராசிகள்
பன்னிரண்டு இராசிகள் உண்டென்றும், அவை மேஷம் முதல் மீனம் வரை வானவீதியின் உச்சியில் உள்ளது என்றும் கண்டோம்.
சூரியனை தினகரன் என்பர். இவர் தான் ஒரு நாளின் துவக்கத்தை உலகுக்கு உணர்த்துபவர். இவரை மாதகரன் என்றும் சொல்வர். அதாவது மாதத்தை உருவாக்குபவர் என்றும அர்த்தமாம்.
இவர் மேஷத்தில் நிற்கும் காலத்தை சித்திரை என்றும், ரிஷபத்தில் நிற்கும் காலத்தை வைகாசி என்றும், மிதுனத்தில் நிற்கும் காலத்தை ஆனி என்றும், கடகத்தில் நிற்கும் காலத்தை ஆடி என்றும், சிம்மத்தில் நிற்கும் காலம் ஆவணி என்றும், கன்னியில்  உலவும் காலம் புரட்டாசி என்றும், துலாத்தில் நிற்கும் காலம் ஐப்பசி என்றும், விருத்சிகத்தில் இருக்கும் காலம் கார்த்திகை என்றும், தனுசில் பவனி வருகையில் மார்கழி என்றும், மகரத்தில் வலம் வருகையில் தை என்றும், கும்பத்தில் இருக்கும்போது மாசி என்றும், மீனத்தில் செல்லுகையில் பங்குனி என்றும் சொல்வர்.
ஒரு ஜாதகத்தில் சூரியன் எந்த இராசியில் நின்றார் என்று கண்டு அந்த ஜாதகர் பிறந்த மாதத்தை நிச்சயம் சொல்லி விடலாம். சூரியனை இந்த பூமி ஒரு நாளைக்கு ஒருமுறை சுற்றுகின்றது என்பதை அறியவும்.
ஒரு இராசிக்கு முப்பது பாகைகள் உண்டு என்று அறிக. ஒவ்வொரு இராசியிலும் சூரியன் ஒரு நாளைக்கு ஒரு பாகையாக கடக்கிறான் என்று நமக்கு ஜோதிடம் அறிந்த முனிவர்கள் சொல்லியுள்ளனர்.
ஒருவரது ஜாதகத்தில் அவரது லக்கினமும் சந்திரன் நிற்கும் இடமும் - அதனை இராசி என்பர் - வெகு முக்கியம் ஆகும்.
ஜாதகத்தில் ல என்று போட்டிருக்கும் இடம் லக்கினமாம். ச என்று போட்டிருக்கும் இடம் இராசியாம். லக்கினம் என்பது ஜாதகரது அமைப்பு, அவரது உயரம், நிறம், உயர்வு, தாழ்வு, புகழ், கீர்த்தி, அவப்பெயர், அபகீர்த்தி, தனம் வரும் நிலைமை, தடுமாறும் நிலைமை, யார் மூலம் உதவி பெற்று உயர்வார் அல்லது தாழ்வார் என்பதை சொல்லும் இடமாகும்.
அதுபோல ச என்று போட்டிருக்கும் இராசியும் ஒருவரது உடல் நிலை, மனோநிலை முடிவெடுக்கும் தன்மை போன்றவற்றை சொல்லும் இடமாகும். ஆகவே ஒருவரது ஜாதகத்தில் உள்ள லக்கினமும் இராசியும் ஒருவரது உடல் அமைப்பு, நிறம், உயரம், திடகாத்திரம், பயனுருதல், பணம் சம்பாதித்தல், எவர் மூலம் நன்மை அல்லது தீமை வரும், உடல் வன்மை, எண்ண ஓட்டம் போன்ற இவற்றை அறிந்து கொள்ள உதவுகின்றது.
மேஷம் என்பது ஆட்டையும், ரிஷபம் என்பது காளை மாட்டையும், மிதுனம் என்பது பஞ்சணையில் அமர்ந்திருக்கும் யுவன், யுவதியையும், கடகம் என்பது நண்டையும், சிம்மம் என்பது சிங்கத்தையும், கன்னி என்பது தோட்டத்தில் உலவும் மணமாகாத பெண்ணையும், துலாம் என்பது தராசு பிடித்த ஆண் மகனையும், விருட்சிகம் என்பது தேளையும், தனுசு என்பது இடுப்புக்கும் கீழ் மிருக உருவமும் இடுப்புக்கும் மேல் வில் பிடித்த ஆண்மகனாகவும், மகரம் என்பது இறகு உள்ள முதலை மீனாகவும், கும்பம் என்பது குடத்தையும், மீனம் என்பது இரு மீன்கள் ஒன்றை ஒன்று கவ்வி பிடிக்க சுழன்று கொண்டுள்ளவற்றையும் குறிப்பதாம்.
ஒருவரது லக்கினமும் இராசியும் எவை என்று கண்ட பின்னர் அந்த இரு பாவங்களை கொண்டு ஜாதகனின் உருவத்தை, நிறத்தை, குணத்தை, எண்ணங்களை, மேன்மையை, உடல் நிலையை, உயர்வை, தாழ்வை, பயன் பெறுதலை சொல்லி விடலாம்.
என்றாலும் கிரகங்களின் வலுவை, இருப்பை, அவை பெற்ற கூடல் அல்லது பார்வையை பொருத்தும் இப்பலன்களை இன்னும் உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ நிர்ணயிக்க நேரிடும்.
அவற்றை பின்னர் நான் சொல்ல இருப்பதால் இப்போதைக்கு அக்கவலையை விட்டு விடுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளவர்களது ஜாதகத்தில் உள்ள லக்கினமும், இராசியும் எவை எவை என்று கண்டு  அவரவரது உருவம், அமைப்பு போன்றவற்றை இன்றே அலச ஆரம்பியுங்கள்.
மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்.
உங்கள் அன்பன்
அ.வீ.மாரிமுத்து -  23 - 07 - 2016

No comments:

Post a Comment